Monday, 3 August 2009

தேடல்.....


சங்கரன் பிள்ளை ஒரு முறை சந்நியாசம் மேற்கொண்டு ஆன்மீகப்பாதையில் போக விரும்பினார்.

அந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற முறையாக ,கோரக்நாத் முறையிருந்தது.எனவே கோரக்நாத் முறையை சேர்ந்தவர்களிடம் சென்று
சந்நியாசம் கேட்டார் சங்கரன் பிள்ளை. அவர்கள் ஒப்புக்கொண்டு அவர் தலையை மொட்டையடித்தார்கள்.

பொதுவாகவே கோரக்நாத் வகையை சேர்ந்தவர்கள் தங்கள் காதுகளில் கண்ணாடி அல்லது தந்தத்தால் ஆன ஒரு வளையலை அணிந்திருப்பார்கள்.எனவே சங்கரன் பிள்ளை காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு,வளையலை மாட்டி மொட்டையடித்து,காவி நிற ஆடையை அணிவித்தார்கள்.அங்கே ஒரு மாதமிருந்தார்.அவருக்கு மன நிறைவு கிடைக்கவில்லை.எனவே மறு படியும் தேடுதலை தொடங்கினார்.

அவர் மிகவும் தீவிரமாக தேடிக்கொண்டிருந்த போது, ஒரு காட்டுக்குள் போனார். அங்கே ஒரு இஸ்லாமியத் துறவியை சந்தித்தார்.தீட்சை கேட்டார்.அவர் காவியை கழற்றிவிட்டு ஒரு பச்சை ஆடையைத்தந்து அணியச்சொல்லி அவர்கள் மதவழக்கப்படி அறுவைசிகிச்சை செய்ய சொன்னார்.அதுவும் நடந்தது. நீண்ட காலம் அந்தக் காயம் சங்கரன் பிள்ளைக்கு ஆறவில்லை . ஏனென்றால் அதை ஒரு மருத்துவர் செய்யவில்லை. காட்டுப்பகுதி வேறு எனவே அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அதைச் செய்திருந்தார்கள் .

அந்த துறவி மொட்டையடிக்கப்பட்ட தலை கூடாதென்றும், முடி வளரவேண்டும் என்றும் சொன்னார்.தலைமுடி மட்டுமல்ல,தாடியும் வளரவேண்டும் என்று சொன்னார் எனவே சங்கரன் பிள்ளை அதை வளர்க்க துவங்கினார்.அங்கே ஒரு மாதம் இருந்தார்.அவருக்கு மன நிறைவு வரவில்லை.

அதையும் விட்டு விட்டு கன்பத் என்கிற துறவு முறைக்கு சென்றார்.மிகவும் புகழ்பெற்ற ஒருமுறை .கோரக் நாத் வகையை சேர்ந்தவர்கள் வலது காதில் ஒரு வளையலை அணிவது போல கன்பத் இனத்தை சேர்ந்தவர்கள் இடது காதில் அணிவது வழக்கம். எனவே இப்போது இடது காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு அதில் ஒரு பெரிய வளையலையும் மாட்டி விட்டார்கள்.

இப்படியே தொடர்கின்றது .உங்களுக்கு புரியும் . இது எங்கே போகும் என்று ???

ஒரு மனிதர் உண்மையான தேடுதலில் இருந்திருந்தால் இது அவனுக்கு நடந்திருக்காது .அவர் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை, அது உங்களை தேடி வரும்......

நாமும் சங்கரன் பிள்ளையை போலத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.......
என்ன தேடுகின்றோம் என நாமே அறியாது .....

Sunday, 2 August 2009

மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!


A Royal Salute To The Great Scientist Mayilswamy Annadurai..........

கோவை அருகில் அமைந்துள்ள
கோதவாடி எனும் கிராமத்தை சேர்ந்தவரும்,
எங்கள் உறவினரும்,
சந்திராயன் விண்கலத்தின் திட்ட குழு தலைவருமான

திரு.மயில்சாமி அண்ணாதுரை
(chandrayan project director) அவர்களுக்கு

டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்த
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எங்கள் நன்றிகள்.....





கடந்த சனிக்கழமை அன்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பர்னாலா அவர்களால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் வலையுலகத்தின் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்!!!!

Monday, 20 April 2009

தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???




மனித வர்கத்தின் மாபெரும் பேரழிவு
மகிந்தாவின் தலைமையில்
மகிழ்ச்சியோ பலருக்கு

காந்தி தேசமே இவர்களுக்கு
காவல்காரனாய்

வன்னியில் வாழ்வினை இழந்தோர்
வாழ்கையே தீயில் இழந்தோர் இவர்களை
வாயை மூடிக்கொண்டு பார்க்கும்
வக்கற்றோர் நாங்கள்

வேடிக்கை பார்க்கும்
வேங்கைகள் இங்கு எங்கள்
வேதனை தீர்க்குமா
வேதங்கள் நான்கு

தமிழனாய் பிறந்ததுக்கு
தலை இன்றி பலர்
தமிழச்சியின் வயிற்றில்
சூல்கொண்டதால் சிதைக்கப்படும்
எங்கள் கண்மணிகள் சிலர்

போரை நிறுத்துங்கள்
போரை நிறுத்துங்கள்
ஜனிக்கட்டும் தமிழீழ குருத்துக்கள்
ஒட்டாய் அழித்துகொள்ளலாம்

வெற்றி முழக்கமிடும் சிங்களவம் அங்கே
வெறி கிளம்புது எங்களிடம் இங்கே
மனிதமே மனிதம் இற்றுவிட்டதா
இல்லை மனிதப் பற்று விட்டதா
தமிழர்க்கு மனமே செத்துவிட்டதா???

Monday, 23 March 2009

வல்லமை தாராயோ !!!!

அகதியாய் அலைந்து உயிர் பிழைக்கவும்
பதுங்கு குழியில் பதுங்கிடவும்

நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்

மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்

கற்பு நெறிகள் கயவர்களால்
காற்றில் கரைவதைகண்டும்

செம்புனல் கண்டு சிதறாமலும்
வன்கொடுமை கண்டு வளையாமலும்

இருக்க வல்லமை தாராயோ!!!!!!!!

Tuesday, 17 March 2009

நிறுத்துங்கள் தோழர்களே

உதித்திடும் செங்கதிரோன் எங்கள்
உள்ளத்து துயர் துடைப்பான் என எண்ணினோம்

அருணனும் எங்கள் நிலை கண்டு அழுதிடும்
பரிதியும் எங்கள் நிலை கண்டு பதறிடும் என நம்பினோம்

ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்

ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவ‌து???

போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது

Tuesday, 10 March 2009

யுத்த பூமி

பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்து
இறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு

முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு

புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது

இது யுத்த பூமி எங்கேடா சாமி????

Saturday, 7 March 2009

கரியும் வைரமாகும்

கூழாங்கல் கரியை கண்டது
கர்வத்தில் சிரித்தது
கரி தன்னை பூமியில் புதைத்தது
காலத்தின் கோலம் கரிகட்டையாய் நாம்

பூமிக்குள் புதையும் என் இனம்
யுகங்கள் கழியும்
மண்ணில் புதைந்த மக்களும்
கரியும் வைரம் ஆகும்

இறைமை கரி கட்டையின் பொறுமைக்கு
அதை வைரம் ஆக்கும்
ஆனால் கூழாங்கலே
எங்கள் கால்களில் மிதி படத்தான் போகிறாய்

எம்மை கண்டு எள்ளி நகை ஆடும்
அனைவருக்கும் இது பொருந்தும்